ஸாதா⁴வயா ப⁴க்தீகாஜ | நாஹீம்ʼ லாஜ த⁴ரீத ||
ராம்கிருஷ்ணஹரி.
‘ப்ரேமை’ ஏன் உயர்ந்தது?
ஏனெனில்…
அ.) தூய ‘ப்ரேமை’யில் எந்தச் செயலைச் செய்தாலும் அது எதையும் எதிர்பாராமல்
இருக்கும். ‘ப்ரேமை’ பிறருக்குக் கொடுப்பதை மட்டுமே விரும்பும். ஒருவர்
வைத்திருப்பது மிகவும் சொல்பமானதாக இருந்தாலும் அதைக் கொடுக்க ஒரு பெரிய இதயம்
தேவை.
ஆ.) தூய ‘ப்ரேமை’யில், ஒருவர் தன்னைவிட மற்றவரையே
முன்னிலைப்படுத்துகிறார். ஒரு ‘ப்ரேமி’ மற்றவருக்காகவே தனது வாழ்க்கையை
வாழ்கிறார். அவரது ஒவ்வொரு செயலும் மற்றவரின் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி
செய்வதை உறுதி செய்வதற்காகவே செயல்படுத்தப்படுகிறது.
c.) தூய ‘ப்ரேமை’யில், ஒருவர் தனது சொந்த அடையாளத்தை அரிதாகவே
உணருகிறார். பல வழிகளில் மற்றவர் இந்த சரீரத்தில் வசிப்பது போல்
உணர்வர். தூய ‘ப்ரேமை’யில் பல வழிகளில் இருமை குறைகிறது.
ஈ.) தூய ‘ப்ரேமை’யில் த்யாகம் தான் அடிப்படை. த்யாகத்தில்
அப்படி என்ன இருக்கிறது என்று ஒருவர் கேள்வி எழுப்பலாம்! த்யாகம் என்பது
மிகப் பெரியது, ஏனென்றால் அது தனக்குப் பிடித்தமான அனைத்தையும் – ஒருவரின் சொந்த வாழ்க்கையையும் கூட, ஒரு
காரணத்திற்காகத் துறக்க ஒருவரைத் தயாராக்குகிறது. இதனால் த்யாகம், அதன்
மூலம் தூய ‘ப்ரேமை’ தெய்வீகமானதாகிறது.
இ.) தூய
‘ப்ரேமை’யில் முரண்பாடு இல்லை. ஒன்று இருந்தால், ஒருவர் மற்றவருக்குச்
செய்தது போதுமானதில்லை என்ற நிலையான எண்ணம் மட்டுமே.
தூய்மையான ‘ப்ரேமை’யைப் பற்றி இத்தகைய பண்புகளை எவ்வளவோ எழுதிக் கொண்டே
போகலாம், மேலும் இது குறித்து இப்போதும் தாய் நாட்டை வழி நடத்தும் அநேக
மஹான்கள் வாழ்வில் எண்ணற்ற நிகழ்வுகளைக் காணலாம்.
காலத்தின்
நினைவில் என்றும் பதிந்திருக்கும் அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை ‘துகா’ கண்முன்
நிறுத்துகிறார்.
மனிதகுலம் இதுவரை
கண்டிராத மிகவும் கொடிய மற்றும் பயங்கரமான போர்களில் ஒன்றைக் கண்ட ‘குருக்ஷேத்ரா’
போர்க்களம்தான் இந்த அமைப்பு. ‘பாண்டவர்களை’ அடிபணிய வைப்பதற்கு ‘கௌரவர்கள்’
கொடூரமாக முயற்சிகள் செய்தார்கள். இது ‘தர்மத்திற்காக’ நடந்த போர் மற்றும்
‘ஸ்ரீ கிருஷ்ணர்’ ‘பாண்டவர்களின்’ பக்கம் இருந்தார். கம்ஸன் மற்றும் பல
அசுரர்களைக் கொன்ற ‘ஸ்ரீ கிருஷ்ணன்’ இருப்பது ‘பாண்டவர்களின்’ வெற்றியை உறுதி
செய்யும், ஆனால் அதே சமயம், அவர் ஆயுதம் தூக்க மாட்டேன் என்று சபதம்
எடுத்தார். அத்தகைய சபதம் யாருடைய மனதையும் நிலைகுலைய வைத்திருக்கும், ஆனால்
‘பாண்டவர்களை’ அல்ல. அவர் அவர்களின் தேரோட்டி.
‘பீஷ்மர்’, ‘துரோணர்’, ‘கர்ணன்’ போன்ற அற்புதமான வீரர்களால் எதிரிப் படைகள்
வழிநடத்தப்பட்டன.
இந்த போரின்
முக்கிய அம்சம் என்னவென்றால், சகோதரர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்
கொண்டதே. உறவினர்கள் ஒருவரையொருவர் படுகொலை செய்து கொண்டனர். ஆனால்
இந்த முக்கிய நிகழ்வின் மத்தியில் மிகப்பெரிய அளவிலான ஒரு முரண்பாடு இருந்தது.
பகவானும் அவரது பக்தரும் எதிர் எதிர் பக்கம் இருந்தனர். இது அனைத்து
மோதல்களுக்கும் உறைவிடமாக இருந்தது. யார் வெற்றிபெறுவார்கள் ? அது
பகவானா அல்லது அவரது பக்தனா? பகவான் வேறு யாருமல்ல, ‘ஸ்ரீ கிருஷ்ணர்’ மற்றும்
பக்தர் வேறு யாருமல்ல, ‘ஸ்ரீ பீஷ்மர்’. ‘ஸ்ரீ பீஷ்மர்’ தனது
மூர்க்கத்தின் உச்ச நிலையில் இருந்தார் !!
இதோ ஒரு பக்தர்,
தனது பகவானை வீரத்தின் சிறந்த எல்லா நிலையிலும் தரிசிக்க
விரும்பினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு, ‘ஸ்ரீ கிருஷ்ணர்’ தனது மற்றொரு அன்பான பக்தரான ‘ஸ்ரீ அர்ஜுனன்’ , ‘ஸ்ரீ பீஷ்மர்’ மூலம் ஏவப்பட்ட கொடிய ஏவுகணைகளுக்கு இரையாகாமல் இருக்க
வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ‘அர்ஜுனனின்’ தேரை முன்னும் பின்னுமாக நகர்த்துவதைத் தவிர
வேறு எதையும் செய்யாத நிலையையே காணும் வாய்ப்புதான் கிட்டியது. இந்தக்
கைகலப்பில் ‘ஸ்ரீ கிருஷ்ணரின்’ சபதமும் சேர்ந்து கொண்டது. எனவே ‘ஸ்ரீ பீஷ்மருக்கு’
நிறைவேறாத ஆசையின் வடிவில் படுதோல்வியை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
இங்கே தூய
‘ப்ரேமை’ யை உணரலாம். ‘ஸ்ரீ கிருஷ்ணர்’ தூய ‘ப்ரேமை’யின்
உருவகம். அப்படி இருக்க வேண்டுமானால், தன் பக்தனின் விருப்பத்தை விட அவருடைய
சொந்த சபதம் அவருக்கு முக்கியமா? ஒருபோதும் இல்லை !! இந்தப் படைப்பு
இதுவரை அறிந்திராத மிகப் பெரிய த்யாகத்தைச் செய்ய ‘ஸ்ரீ கிருஷ்ணர்’ முடிவு
செய்தார். பொய்யின் ஒரு புள்ளியால் கூட கறைபடாத அந்த ‘சத்யவ்ரதன்’
(உண்மையின் வீரன்) தனது சபதத்தைக் கைவிட முடிவு செய்து தனது ‘சக்ராயுதத்தை’
தூக்கிக் கொண்டான். இது நடந்தபோது ‘ஸ்ரீ பீஷ்மரின்’ உணர்வுகளை வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாது. ‘ஸ்ரீ கிருஷ்ணரின்’ வீரத்தைக் காண வேண்டும் என்ற ‘ஸ்ரீ பீஷ்மரின்’ விருப்பத்தை பகவான் சக்ராயுதத்தை சுழற்றிக் கொண்டு
வந்து நிறைவேற்றினார்.
எனவே இந்த
அபங்கத்தில் ‘துகா’ கூறுகிறார், பீ⁴ஷ்மபண கேலா க²ரா . த⁴னுர்த⁴ரா
ரக்ஷீலேம் ॥3॥
[ஒரே நேரத்தில்,
அவர் பீஷ்மரின் சபதத்தை உண்மையாக்கினார், மேலும் வில் வீச்சாளர் (அதாவது அர்ஜுனனை)
பாதுகாத்தார்].
‘ஸ்ரீ
கிருஷ்ணரின்’ இந்த செயல் ப்ரமிக்க வைக்கவில்லையா? இந்த செயல் எதன்
அடிப்படையில் நிகழ்ந்தது? ‘துகா’ ,’ஸாதா⁴வயா ப⁴க்தீகாஜ . நாஹீம்ʼ லாஜ த⁴ரீத
॥1॥ (தனது பக்தரின் பக்தியை நிலைநிறுத்துவதற்காக, அவர் எதற்காகவும்
வெட்கப்படாமலும், யார் என்ன நினைப்பரோ என்று கவலைப்படாமலும்
செய்வார்). அவரது பக்தரின் ‘பக்தி’ அவரை இத்தகைய மகத்தான முடிவுகளையும்
கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்க வைக்கிறது. தன் பக்தனின் விருப்பத்தை
நிறைவேற்ற முடியாத பகவானாகக் கறைபடுவதை விட, தன் வாக்கைக் கடைப்பிடிக்காத ஒருவனாக
இருக்கவே விரும்புவான். தூய ‘ப்ரேமை’யில் உள்ள உயர்ந்த த்யாகத்தை இது விளக்கவில்லை
என்றால் வேறு எதுதான் விளக்கும்?
ராம்கிருஷ்ணஹரி.
அபங்கம்.
ஸாதா⁴வயா
ப⁴க்தீகாஜ | நாஹீம்ʼ லாஜ த⁴ரீத
||1||
ஐஸியாஸீ ஶரண
ஜாவேம்ʼ | ஶக்தீ ஜீவேம்ʼ ந வஞ்சீ ||த்⁴ரு||
பீ⁴ஷ்மபண கேலா
க²ரா | த⁴னுர்த⁴ரா
ரக்ஷீலேம்ʼ ||3||
துகா ம்ஹணே ஸாக்ஷ
ஹாதீம்ʼ | தோ ம்யாம்ʼ சித்தீம்ʼ த⁴ரியேலா ||4||
Abhang Saahityam Curator: Sri Pundalik Maharaj Dehukar, a descendant of Sant Tukaram
Editors : Smt Poornima Srikanth, Tripunithura, Smt Vishaka Srinivasan, Mumbai
Tamil Translation: Smt Vasantha Srinivasan, Bengaluru
Co-ordinator: V R Radhakrishnan, Chennai
Comments
Post a Comment